#Breaking:வள்ளலார் பிறந்த நாள்..இனி “தனிப்பெருங்கருணை நாள்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

வள்ளலார் பிறந்த நாளான இன்று ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

‘இறைவன் ஒருவரே,அவரே தனிப் பெரும் கருணை கொண்டவர்’ என்றவரும்,சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர்,  சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர் வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளாரின் 199-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில்,வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி “தனிப்பெருங்கருணை நாளாக” கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:

“அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823-இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார்.

இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை உரைநடைகளை கண்ட வாசகம், எழுதினார். இவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில் எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும்,சம்மதம் ஆக்கி கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர்,சத்திய தருமச்சாலையையும்,சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.