12-17 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி பலனளிக்கிறது – அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!
12-17 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி பலனளிக்கிறது – அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!
12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கும் தங்களது தடுப்பூசி வேலை செய்வதாக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி சுத்தமாக இருப்பதையும் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தற்போது கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என கூறப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலேயே தடுப்பூசி தட்டுப்பாடு அதிகம் ஏற்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதலை இந்த மாத தொடக்கத்தில் வழங்கியது. அதன்படி இரு நாடுகளிலுமே 12 வயது சிறுவர்களுக்கு பைசர் மற்றும் பயோந்டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்களது தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிடம் வேலை செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 3700 சிறுவர்கள் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் தங்களது தடுப்பூசி சிறுவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பிற உலகளாவிய கட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.