உத்திரப்பிரதேச அரசு கொரோனாவின் 3-ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது – முதல்வர் யோகி ஆதித்யநாத்!

கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள உத்தரபிரதேச அரசு தயாராக இருப்பதாகவும், கருப்பு பூஞ்சை தொற்றை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் கொரோனாவின் மூன்றாம் அலை உத்தரப்பிரதேசத்தில் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கொரோனாவின் மூன்றாம் அலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் உத்தரபிரதேச அரசு இப்போதே ஆரம்பித்து விட்டது. மேலும், இந்த மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிரத்தியேக மருத்துவமனைகளும் அமைக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்திரப்பிரதேசத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நொய்டாவில் கொரோனா சிகிச்சைக்கான நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆய்வுகள் மேற்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அதன் பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக உத்தரபிரதேச அரசு தற்போது தயாராகி வருவதாகவும், மருத்துவ அவசர சேவையான 102 இன் கீழ் 2200 ஆம்புலன்ஸ்கள் தயாராக இருப்பதாகவும் ,இது தவிர மருத்துவமனை மூலமாகவும் சிகிச்சைக்கான ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக வழங்கப்பட்டு வருவதுடன் உயிரிழப்பு விதத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ள கருப்பு பூஞ்சைத் தொற்றை எப்படி ஒழிப்பது மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுகாதார அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுடன் காணொலி வழியாக ஆலோசனை கூட்டத்தை அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதை தவிர்த்து விடலாம் எனவும் இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal