உத்திரப்பிரதேசம்:மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்..!வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்த மகள்கள்..!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்த மகள்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,அம்மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்,உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கடுமையான மூச்சுத்திணறலுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டிருந்த தாய்க்கு,அவரின் மகள்கள் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்தனர்.இருப்பினும்,மூச்சுத்திணறல் சரியாகாததால் அவர்களின் தாய் உயிரிழந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு,உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு பெண் தனது கணவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காததால்,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் அளித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.