காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூடி காதர் வேட்பு மனு தாக்கல்!

கர்நாடக மாநிலத்தின் முஸ்லிம் வகுப்பில் இருந்து முதல் சபாநாயகராக தேர்வாக உள்ளார் யூ.டி.காதர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ.டி. காதர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக மாநிலத்தின் முஸ்லிம் வகுப்பில் இருந்து முதல் சபாநாயகராக தேர்வாக உள்ளார் யூ.டி.காதர். சபாநாயகர் பதவிக்கு காதர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உடன் இருந்தனர்.

எனவே, கர்நாடக சட்டப் பேரவையில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார். மங்களூரு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ யுடி காதருக்கு கர்நாடக சட்டப் பேரவையில் சபாநாயகர் பதவி வழங்க தேசிய காங்கிரஸின் உயர்நிலைக் குழு முடிவு செய்தது. 53 வயதான காதர் ஐந்தாவது முறையாக எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 2008-ஆம் ஆண்டு முதல் உல்லால் என்று அழைக்கப்படும் மங்களூரு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

முந்தைய சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த அவர், 2013ல் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையிலும், 2018ல் குறுகிய கால ஜனதா தளம் (மதச்சார்பற்ற)-காங்கிரஸ் அரசாங்கத்திலும் பதவி வகித்துள்ளார். இந்த சமயத்தில், சபாநாயகர் பதவிக்காக காதர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

65 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக மற்றும் 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜேடி(எஸ்) எந்த வேட்பாளர்களையும் நிறுத்தப் போவதில்லை என்பதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட  உள்ளார். கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்கான மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நாளை காதர் கர்நாடக சட்டசபை சபாநாயகராக பொறுப்பேற்கிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்