#BREAKING : மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின்  இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே நிறுத்த முடிவு செய்யப்பட்டது.இன்று இதற்கான விழா மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நடைபெற்றது.இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,டி.ஆர் பாலு,மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக முறைப்படி  பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி , ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.