தீவிரவாத தாக்குதலில் திரிபுராவின் எல்லைப்பாதுகாப்பு படையினர் இருவர் பலி..!

திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். 

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு படையினருக்கு பலத்த காயமடைந்துள்ள காரணத்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சண்டை காலை 6.30 மணியளவில் நடைபெற்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளில் சிலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கும், மேலும் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.