டுவிட்டர் இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக ஜெர்மி கெசல் நியமனம்..!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு,இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார்.ஆனால்,அரசின் விதிப்படி,தர்மேந்திர சாதுர் அவர்களின் பெயர்,முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில்,டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.

இதனையடுத்து,டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் இன்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,முகவரி மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக டுவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.

ஏற்கனவே,ஜெர்மி கெசல் டுவிட்டரின் உலகளாவிய சட்ட கொள்கை இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.