திருச்சி: தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்திற்கு சீல்,ரூ.5 லட்சம் அபராதம்.!

தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய  திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி உறையூர் குறத்தெரு அருகிலுள்ள ராமலிங்க நகரில் தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு, குழந்தையின்மை, உடல் பருமன் என அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்படும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வகத்திற்கு தான் முதலில் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மேலும் 3 ஆய்வகங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலை உறையூரில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகம் தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கையை தருவதாக புகார்கள் வந்ததை அடுத்து, அந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு மற்ற நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையர்கள் அந்த பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைத்து, ரூ. 5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக அளித்ததற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சார்பிலும், ஆய்வகம் செயல்படும் கட்டிடம் சட்ட விதிகளை மீறி கட்டியுள்ளார் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆய்வகத்திற்கு சீல் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.