பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய் கூறி மாட்டிக் கொண்ட இளம்பெண் தற்கொலை!

தன்னை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டதாக அண்மையில் பொய் கூறி காவல் துறையில் சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவி தற்பொழுது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரியில் படித்து வரக்கூடிய மாணவி ஒருவர் மாலை நேரம் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் பொழுது, 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதுடன் காவல்நிலையத்தில் அப்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்ததில், சிசிடிவி காட்சிகள் மற்றும் சில ஆதாரங்கள் மூலம் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதமானதால் வீட்டில் இவ்வாறு பொய் கூறி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இவ்வாறு பெண்கள் பொய் கூறுவதால் உண்மை கூறுபவர்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என சிலர் கூறி வந்த நிலையில், தற்பொழுது இந்த பொய் குற்றச்சாட்டு கூறிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்த பெண்ணை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் உயிர் இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வீட்டிலேயே உயிரிழந்து விட்டாரா, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைஅளித்த பின் உயிரிழந்தாரா என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்பொழுது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

author avatar
Rebekal