போக்குவரத்து ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்…! ஓபிஎஸ் கோரிக்கை….!

போக்குவரத்து ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்…! ஓபிஎஸ் கோரிக்கை….!

போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப்பணியளர்களாக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மக்களுக்கு பணி செய்வதற்காக, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல்,   மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என பலரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோரை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ளது போல, போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப்பணியளர்களாக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் ஒரு குடும்பம்’ என்னும் தத்துவத்தை அடைய உறுதுணையாக இருப்பதிலும், மக்களை இணைப்பதிலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து என்றால், அந்தப் போக்குவரத்துச் சேவையினை செவ்வனே மேற்கொள்பவர்கள், அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், கொரோனா நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காகவும் பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

தங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து, பத்திரிகையாளர்கள், சுகாதாரப் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும்; அப்படி அறிவிக்கப்பட்டால்தான் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் என்றும்; 31-5-2021 உடன் காலாவதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட் ட்டினை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும் என்றும்; ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்றும்; பணி ஓய்வு மற்றும் விருப்பப் பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube