TOKYO2020:பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வெற்றி…ஆனாலும்,சோகம்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் 3 வது சுற்றில் சாத்விக்சைராஜ், சிராக் ஷெட்டி இணை வெற்றி பெற்றுள்ளது. ஆனால்,ஒலிம்பிக்கின் காலிறுதிக்கு தகுதி பெறவில்லை.

ஒலிம்பிக் 2020 தொடரின் நான்காவது நாள் ஆட்டமான நேற்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.அதன்படி, நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி அடைந்து வெளியேறினார்.

தோல்வி:

இதனைத் தொடர்ந்து,ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில், இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயாவிற்கும், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே,ஆதிக்கம் செலுத்திய முதல் செட்டை இந்தோனேசிய ஜோடி 21 – 13 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இரண்டாவது செட்டில் இந்திய ஜோடியின் ஆட்டம் மிக மோசமாக இருந்ததால் இரண்டாவது செட்டையும் இந்தோனேசிய ஜோடி 21 – 12 என்ற கணக்கில் கைப்பற்றியது.இதனால்,இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

இருப்பினும் முன்னதாக,நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சீனாவின் தைபே அணியை வீழ்த்தி இந்தியா ஒரு புள்ளியை பெற்று இருந்தது.

பிரிட்டன்:

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் 3 வது சுற்றில் சாத்விக்சைராஜ், சிராக் ஷெட்டி ஜோடி,பிரிட்டனின் பென் லேன், சேன் விண்டி ஜோடியை எதிர் கொண்டது.

அதன்படி,ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது. ஏனெனில்,முதல் செட்டில் இருந்தே இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தி வந்தது.இதனால்,முதல் பாதியில்  21 – 17 என்ற கணக்கில் இந்திய ஜோடி வென்றது.

வெற்றி – ஆனால்?:

இதனையடுத்து,இரண்டாவது பாதியில் பிரிட்டன் அணி மாறி மாறி புள்ளிகளை பெற்று முன்னேறி வந்தது.எனினும்,இந்திய வீரர் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் 21- 19 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றினர். இதன்காரணமாக,இந்திய ஜோடி 2 – 0 என்ற புள்ளி கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

எனினும்,காலிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.இதனால்,இரட்டையர் பிரிவில் பதக்க வாய்ப்பு கனவாகியது. மாறாக,சீனாவின் தைபே மற்றும் இந்தோனேசியா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.