ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா; அச்சத்தில் ஒலிம்பிக் வீரர்கள் …!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள பிரேசில் அணியின் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சுமார் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23  ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,பிரேசில் ஒலிம்பிக் அணி  வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்த 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவின் மேற்கே உள்ள ஹமாமாட்சு நகரில் உள்ள ஹோட்டலில் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டன.அப்போது,ஊழியர்களில் எட்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  உள்ளது என்றும்,பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் விளையாட்டு வீரர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் நகர அதிகாரி  யோஷினோபு சவாடா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிடிவ் பரிசோதனை செய்ததாக ஹமாமட்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும்,பிரேசில் அணியின் சுமார் 30 பேர் கொண்ட ஜூடோ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டோக்கியோவில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால்,தற்போது அந்நகரம் அவசரகால வைரஸ் நிலையில் உள்ளது. டோக்கியோவில் நேற்று 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

மேலும்,நேற்று ஜூலை 1 முதல் 13 வரை வந்த 8,000 க்கும் மேற்பட்டவர்களில் ,மூன்று பேருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால்,கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் கடுமையான வைரஸ் விதிகளுக்கு உட்பட்டு ஜப்பானிய மக்களிடமிருந்து பெரும்பாலும் விலகி உள்ளனர்.

இதற்கிடையில்,ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக், “ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள போட்டிகளினால் ஜப்பானுக்கு “எந்த ஆபத்தும் வராது”, என்று உறுதியளித்துள்ளார்.