இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் விநியோகம்.!

இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே ரூ.3 ஆயிரத்து 280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரலில் அனைத்து 2.01 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும்ரூ.1000 உதவி தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டன. இதில், 98.85 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையும், 96.30 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், சர்க்கரை 1Kg, துவரம் பருப்பு 1Kg, சமையல் எண்ணெய் 1L, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்று முதல் 31-ம் தேதிவரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்