கனமழை எச்சரிக்கை…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும், கனமழை காரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்கள் இருப்பு வைத்துக் கொள்ளவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும்,

நீர் நிலைகளில் குளிக்கவோ,அங்கு சென்று செல்பி எடுக்கவோ கூடாது என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.