மும்பையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் நீக்கம்!

மும்பையில் 3 குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்கள் பாதிப்படைந்துள்ளதையடுத்து, அவர்களது உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு கண்கள் நீக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனால் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில் மும்பையில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் நீக்கப்பட்டுள்ள சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பையை சேர்ந்த 4 வயது 6 வயது மற்றும் 14 வயதுடைய மூன்று குழந்தைகளுக்கு இந்த கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு 48 மணி நேரத்துக்குள் கண்கள் கருப்பாக மாறியதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு மூக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். குழந்தைகளின் உயிர் காப்பதற்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal