“கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட இந்த தடைகள்;முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்” – எம்பி சு.வெங்கடேசன் கடிதம்..!

தமிழகத்தின் முக்கியமான ரயில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவதில் கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான தடைகளை முதல்வர் நீக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“இரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தின் இரயில்வே வளர்ச்சித்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்த போது தங்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பிரச்சனையை இரயில்வே அதிகாரிகள் என்னிடம் சுட்டிகாட்டினார்கள்.

அதனை தங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன். மதுரை – தூத்துக்குடி மணியாச்சி- நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதை திட்டங்களும், மதுரை- போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும் பேரளம் – காரைக்கால் புதிய பாதை திட்டமும் மார்ச் 2022-க்குள் முடிய வேண்டியவையாகும்.

ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுபடி மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருள்கள் இல்லை உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு.

ஆனால் முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர்நீதிமன்றத்தின் மற்ற கருத்துக்கள் குறித்து எந்த ஒரு உத்தரவும் வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான இந்தத்தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரயில் வளர்ச்சிப்பணிகள் முடிவடைவது தாமதமாகின்றன. எனவே தாங்கள் தலையிட்டு, தமிழக அரசு பரிசோதனை கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து வரையறைகள் செய்து உத்தரவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”,என்று வலியுறுத்தியுள்ளார்.