#BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தடை இல்லை- உயர்நீதிமன்றம் உத்தரவு…!

பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

20 ஆயிரம் டன் பருப்பு 80 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெண்டர் அறிவிப்பில் முந்தைய நிபந்தனைகள் பின்பற்றாமல் புதிய நிபந்தனைகள் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் கடைசி மூன்று ஆண்டுகளில் 71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்க வேண்டும் என்பது பழைய நிபந்தனையாக உள்ளது.

ஆனால் புதிய நிபந்தனையில் கடைசி மூன்று ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் வருமானம் இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெண்டர் அறிவிப்பில் உள்ள 14 விதிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை, 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டெண்டருக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த டெண்டருக்கு 6 நாள்களில் முடிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே இந்தத் டெண்டரை ரத்து செய்து புதிய நிபந்தனை படி டெண்டர் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருந்தது. இந்நிலையில், மதுரை கிளையில் மணிகண்டன்  பருப்பு, எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கை  திரும்பப் பெற்றுக்கொண்டார்.

வழக்கு வாபஸை அடுத்தது சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர். பின்னர், மதுரை கிளை விதித்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

author avatar
murugan