தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன! – பாமக நிறுவனர் ராமதாஸ்!

உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது.

இதனால் இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழல் தெளிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்