#Breaking: பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு?? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பும் குறைந்து கொண்டே வரும் நிலையில், மேலும் பல தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது பண்டிகை காலம் என்பதால், திரையரங்குகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதுகுறித்தும், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகளும் திறக்க ஆலோசனை மேற்கொள்ளவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மாலை 3.30 மணிக்கு ரங்கராஜன் குழு அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.