மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் – தினகரன்

மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில்  சாலை மேம்பாட்டு அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.2,650 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு.

குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.