“ஒருநாள் போதாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு..!

  • சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது.
  • அதேபோல்,மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தற்கு,மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவரும்,தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில்,ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையில்,மதுரையில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில்,”2017-2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால்,அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும்,தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே,தனித்தன்மை நூலகம் மற்றும் காட்சியங்கள் அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிடுங்கள்”, என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள்,இன்று விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து,தமிழகத்தில் 7 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் ரூ.70 கோடியில் மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது”,என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதனை கேட்ட நீதிபதிகள்,”சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது.அதே போல மதுரையில் அமையப்போகும் கலைஞர் நினைவு நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள்.மேலும்,மதுரையில் அமைய உள்ள நூலகம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன் தரும்”,என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.