ஆண் நண்பருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய தங்கை…, அடித்து கொன்ற அண்ணன்!

ஆண் நண்பருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய தங்கை…, அடித்து கொன்ற அண்ணன்!

16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் முருகேசனின் 16 வயதுடைய இளைய மகள் காயத்ரி கடந்த சில நாட்களாக ஆண் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டனம் தெரிவித்தும் அச்சிறுமி கேட்காமல் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் வீட்டுக்கு சென்ற பொழுது தனியாக அமர்ந்த நிலையில் காயத்ரி நீண்ட நேரமாக ஆண் நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்ட பாலமுருகன் காயத்ரியை கடுமையாக தாக்கி அவளது குரல்வளையை நெறித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த காயத்ரியை பாலமுருகன் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

இருப்பினும் காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமியின் குரல்வளை நெறிக்கப்பட்டு, உடைந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சிறுமியின் அண்ணன் பாலமுருகனை கைது செய்த பழனி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube