காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

  • கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
  • பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி கடந்த 23-ம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று சரண்யாவின் குடும்பத்தார் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களைத் தேடி பியூட்டலின் வீட்டிற்கு வந்த போலீசார், விசாரணைக்கு திருமணமான காதல் ஜோடியை அழைத்து வரும்படி கூறிச் சென்று விட்டனர். காவல்துறையினரின் விசாரணைக்காக 25-ம் தேதி பியூட்டலின் அவரது மனைவி சரண்யா மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களை சுற்றி வளைச்சி பியூட்டலினை சரமாரியாக தாக்கியதோடு சரண்யாவை அருகிலிருந்த காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தனது மருமகளை அவரது உறவினர்கள் கொலை செய்ய வாய்ப்புள்ளதாக பியூட்டலின் தாயார் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். விசாரணைக்காக காவல்நிலையம் வந்த திருமணமான காதல் ஜோடியை காவல் நிலையத்தில் வைத்தே தாக்கி பெண்ணை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube