“அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல்ஹாசன்..!

“அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” – கமல்ஹாசன்..!

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்  என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நீண்ட காலப் போராட்டம்:

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலையளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் போராடி வரும் பணியாளர்களின் குரலுக்குத் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

நேர்மையாகத் தேர்வு:

அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன் அனைத்து காலிப்பணியிடங்களையும் நேர்மையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

பதவி உயர்வு:

அரசுப் போக்குவரத்துப் பணியாளர்களுக்குக் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதுடன் ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.மேலும்,பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஓவர் டூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களும் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்.

7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டம், தரமான கேண்டீன், வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல் நலத்தையும் உள்ள ஆரோக்கியத்தையும் பேணுவதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

பொற்கால ஆட்சி:

திமுக ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அதை செயலில் காட்டும் வகையில் நடைபெற இருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube