இனிமேல் உயராது என்ற உறுதிமொழி தான் உண்மையான தீர்வு – மநீம

விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட்.

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும், இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்றும், அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இருப்பினும், பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விட்டு பின்பு குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டு, தற்போது குறைத்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்காது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும். அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2015-ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000-ஐத் தாண்டிவிட்டது. அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும். எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிடில், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment