இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபர்..!

இமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைய டொனால்ட் ட்ரம்ப்,அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் போலி ‘இ-பாஸ்கள்’ பெற்ற நபரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.மேலும்,பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடந்து,இமாச்சலப் பிரதேசமும் தங்கள் மாநிலத்திற்குள் வருபதற்கு ‘இ-பாஸ்’ முறையை கட்டாயமாக்கியுள்ளது.மேலும்,பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே ‘இ-பாஸ்’ அனுமதி என்றும்,அதன்படி வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவர் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் ‘இ-பாஸ்கள்’ பெறப்பட்டுள்ளன.

இதுத்தொடர்பாக,இமாச்சலப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் சிம்லா கிழக்கு காவல் நிலைய போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் விதிகளின் கீழ்,முக்கிய பிரபலங்களின் பெயர்களில் ‘இ-பாஸ்களை’ பெற்ற சம்மந்தப்பட்ட நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இதுகுறித்து சிம்லா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”மே 7ஆம் தேதியன்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயரில் ‘ஹெச்பி -2563825’ மற்றும் ‘ஹெச்பி -2563287′ என்ற இரண்டு இ-பாஸ்கள்’ பெறப்பட்டுள்ளன. ஆனால்,இந்த இரு இ-பாஸ்களும் ஒரே மொபைல் நம்பர் மற்றும் ஒரே ஆதார் எண் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து,சம்பந்தப்பட்ட நபரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்”,என்று கூறினார்.