தொடரும் மோதல் ! ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.அதில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன் &வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவரது பதிவில்,பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று தெரிவித்தார்.
தற்போது இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!நான் சொல்வது பொய்..

அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார்.


முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
 


முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே மோதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.