ரேஷன் அரிசிக்காக 80 கி.மீ சைக்கிளில் சென்ற முதியவர் சாலையில் மயக்கம்!

ரேஷன் அரிசியை வாங்குவதற்காக விருதுநகரிலிருந்து மதுரைக்கு 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்ற முதியவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட செல்லத்துரை என்பவருக்கு 59 வயதாகிறது. இவர் கடந்த எட்டு ஆண்டுகள் தனியார் கம்பெனியில் உள்ள கார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேலை அவ்வளவாக இருவருக்கும் இல்லாததால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டு உணவின்றி தவித்து வந்துள்ளனர்.

எனவே, அவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று அவர்களது ரேஷன் கார்டுக்கான ரேஷன் பொருட்களையும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வாங்கிவிடலாம் என்று சைக்கிளிலேயே விருதுநகரில் இருந்து மதுரை மாவட்டம் வரை 80 கிலோ மீட்டர் வரை பயணித்துள்ளார். இதனால் வழியிலேயே திருமங்கலத்தில் மயங்கி விழுந்துள்ளார் முதியவர். மதுரையை இவர் அதன் பின்பு அடைந்தாலும், அங்கும் ரேஷன் பொருட்களை மட்டுமே கொடுத்துவிட்டு நிவாரணம் கிடையாது என்று கூறியதால் ஊருக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளார். இவரின் நிலையறிந்து அரசு உதவிட வேண்டும் என அங்கிருந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author avatar
Rebekal