வாக்கு சாவடி எண்ணிக்கை 68,324 -லிருந்து 93,000-ஆக உயர்வு- சுனில் அரோரா அறிவிப்பு ..!

தமிழகத்தில் 68,324 இருந்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை தற்போது 93000 ஆக உயர்த்தபட்டு உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பிற மாநில அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தததாக சுனில் அரோரா தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் தமிழகத்தில் 68,324 இருந்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை தற்போது 93000 ஆக உயர்த்தபட்டு உள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு நேரமானது ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும். 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்களிப்பதில் அரசியல் கட்சிகளிடையே மாற்றுக் கருத்துகள் உள்ளன. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும் என சுனில் அரோரா கூறினார்.

author avatar
murugan