கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் அவரின் தாயார் சித்ரா.

கோகுல் ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோகுல் ராஜின் தாயார் சித்ரா, இந்த வழக்குக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

என் மகன் எந்த தவறும் செய்யவில்லை, திருடல… எந்த பெண்ணையும் தவறாக எதுவும் செய்யவில்லை…என் மகன் கோகுல் சிறு வயதில் இருக்கும் பொழுதே என் கணவர் இறந்துவிட்டார். நானும் என் கணவரும் கம்மியாக தான் படித்திருக்கோம். அதனால் கோகுல்ராஜை நல்ல படிக்க வச்சி, அவனுக்கு ஷு போட்டு பாக்கணும் ரொம்ப ஆசை. ஒன்னுமே செய்யாத என மகனை கூட்டிட்டு போய், சித்தரவதை செய்து கொடுமை படுத்தி தலையை துண்டித்து கொலை செய்து விட்டார்கள். அதனால் இந்த தண்டனை கிடைத்ததுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி, யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ், அமுதரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 2 பேர் இறந்த நிலையில், 10 பேர் குற்றவாளிகள் என்றும் 5 பேரை விடுதலை செய்தும் கடந்தாண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. தற்போது, தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

அதன்படி, முக்கிய குற்றவாளியான யுவராஜ், அவரது கார் ஓட்டுநரான அருணுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரை சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.