“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள்;மோடி அரசு தவறிவிட்டது” – கே.எஸ்.அழகிரி..!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது.என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பாஜகவின் தவறான கொள்கை:

கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறான கொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன.

பொது முடக்கம்:

இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின் அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் இவற்றின் பங்கு 40 சதவீதமாகவும் இருந்தது. அதோடு, 90 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலையின் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. இரண்டாவது அலை தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த நிறுவனங்கள் மேலும் சீரழிவைச் சந்தித்தன.

முதல் அலையின் போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லை. அதேபோல, இப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு:

குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்த தரவுகளோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லை. இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு, 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும் மூடப்பட்ட வருவதால், பலரும் வேலை இழந்து வருகின்றனர். உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ. 3 லட்சம் கோடியை இந்த நிறுவனங்களுக்கு வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இதில் பதிவு செய்யப்பட்டவை 25 லட்சத்து 13 ஆயிரம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 60 சதவீதம் தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கைவிட்டதால், தமிழகத்தில் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

போர்க்கால அடிப்படையில் மீட்பு:

இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்டெடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.