இந்த பிரச்சனையில் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணி கட்சி குறித்து தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் நினைத்தனர் என்றும் குறிப்பிட்டியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவன், சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு அதிமுக எடுத்த சில தவறான முடிவுகளே காரணம். பாஜவுடனான கூட்டணியால் அதிமுக தோல்வி என்ற சிவி சண்முகத்தின் கருத்து அதிமுகவின் கருத்தா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவால் தான் தோல்வி என பாஜகவினர் இடையேயும் கருத்து நிலவுகிறது. சிவி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பதிலடிகொடுத்திருந்தார்.

இதையடுத்து சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்ற கருத்தை நான் கூற முடியாது என்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்துவிட்டது, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும்போது கூட்டணி நிலை குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை பற்றி அதிமுக நிர்வாகி கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல. உட்கட்சி கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியுள்ளார், வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த பிரச்சனையில் கட்சியின் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்