வருமானவரி சோதனை.! அதிகாரிகள் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு.!

வருமான வரித்துறையினர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடுகள் அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்கள் இல்லங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் என கரூர், சென்னை, கோவை மாவட்டங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஒரு சில இடங்களிலும் அவர்களது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயம் வருமான வரித்துறையினர் வாகனங்கள் சில சேதப்படுத்தப்பட்டன. மேலும் சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தாக்கப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீதம் உள்ள அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பணிசெய்ய விடாமல் தடுத்தல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதே போல, திமுகவினர் சிலர் அளித்த புகாரின் பெயரில் வருமானவரித்துறையினர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்கியதாகவும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதனால் வருமானவரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.