TOKYO2020: 3 போட்டிகளில் தொடர் தோல்வி – மீண்டு எழுந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

TOKYO2020: 3 போட்டிகளில் தொடர் தோல்வி – மீண்டு எழுந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

தொடர் தோல்வி:

அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும்  2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி,நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது.

5 வது இடம்:

ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 6 அணிகள் கொண்ட குழுவில் 4 இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும். ஆனால்,தற்போது இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.எனவே,கண்டிப்பாக அடுத்த போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

மோதல்:

இவ்வாறு தொடர்ந்து 3 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிறகு,இன்று  நடைபெற்ற பெண்கள் ஹாக்கி போட்டியில் அயர்லாந்து அணியை, இந்தியா எதிர்கொண்டது.மழை காரணமாக ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மீண்டு எழுந்தது:

பின்னர்,போட்டி தொடங்கியது முதல் 56 நிமிடங்கள் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.கடைசியில் இந்திய வீராங்கனை நவ்நீத் 57 வது நிமிடத்தில் கோல் அடித்தனால்,இந்தியா 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று,தோல்வியில் இருந்து மீண்டு எழுந்துள்ளது.

மேலும்,நாளை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்திலும்,இந்திய மகளிர் அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube