#Alert:அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.

இந்நிலையில்,அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும்,இது மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் இடையே வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக,தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ராமநாதபுரம், சிவகங்கை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும்,இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரி,கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை,தென்மேற்கு வங்கக்கடல்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.