மீண்டும் சீனாவில்..! உலகத்தில் முதல் நபரை தாக்கிய மற்றொரு வைரஸ்..!

சீனாவின்,ஜியாங்சுவில் வசிக்கும் 41 வயதான ஒருவர் எச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்,இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் உள்ளார் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவின்,ஜியாங்சு நகரில் வசிக்கும் 41 வயதான ஒருவர்,காய்ச்சல் மற்றும் சில வினோதமான அறிகுறிகள் காரணமாக ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து,மே 28 ஆம் தேதியன்று அன்று அவருக்கு “எச் 10 என் 3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா) வைரஸ்” இருப்பது கண்டறியப்பட்டது.அதனால், உலகிலேயே இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார்.

எனினும்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.ஆனால் அவர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.அதன்காரணமாக,அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மருத்துவ ஆய்வு செய்ததில் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று உறுதியானது.

இதனைதொடர்ந்து,இந்த எச் 10 என் 3 வைரஸானது,குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நோய்க்கிருமி என்றும்,இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு மற்றும் அது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) இன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,இந்த வைரஸானது “பொதுவான வைரஸ் அல்ல” என்று ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய அலுவலகத்தில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் விலங்கு நோய்களுக்கான அவசர மையத்தின் பிராந்திய ஆய்வக ஒருங்கிணைப்பாளர் பிலிப் கிளாஸ் கூறினார்.

மேலும்,இதுகுறித்து பிலிப் கூறுகையில்,”கடந்த 2018 ஆம் ஆண்டு வரையிலான 40 ஆண்டுகளில் சுமார் 160 தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன.பெரும்பாலும் ஆசியாவில் உள்ள காட்டு பறவைகள்,வட அமெரிக்காவின் சில வரையறுக்கப்பட்ட பகுதிகளிலும்,குறிப்பாக எந்த கோழிகளிலும் இந்த எச் 10 என் 3 வைரஸ் கண்டறியப்படவில்லை.அதனால்,இந்த வைரஸானது புதிதாக உள்ளது.

இதனால்,வைரஸின் மரபணு தரவை பகுப்பாய்வு செய்வது,பழைய வைரஸ்களை ஒத்திருக்கிறதா அல்லது வெவ்வேறு வைரஸ்களின் புதுமையான கலவையா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்”, என்று  கூறினார்.