அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- தினகரன்

தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்றக்குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கை விடாமல் இருப்பது சரியானதல்ல.

இதனால் 5,000க்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்குப் பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.