இந்தியா VS இங்கிலாந்து மகளிர் டி-20 போட்டி; அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹர்லீனின் கேட்ச்…! வீடியோ உள்ளே..!

இங்கிலாந்து  மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதல் போட்டியானது நார்தாம்டனில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால்,இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில்,7 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது.

அதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவரில் 53 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.இதனைத் தொடர்ந்து,மழை பெய்ததன் காரணமாக போட்டி  பாதிலேயே நிறுத்தப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறையின் படி 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையில்,இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது 19 வது ஓவரில், ஏமி எலன் அடித்த பந்தை ஹர்லீன் டியோல் அற்புதமாக கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஹர்லீனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும்,இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்‌ஷ்மன், ஹர்லீனை பாராட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,இந்திய கிரிக்கெட்டின் ‘லிட்டில் மாஸ்டரான’ சச்சின் டெண்டுல்கரும்,ஹர்லீனை பாராட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :”என்னை பொறுத்தவரை இது இந்த ஆண்டிற்கான ஒரு அற்புதமான கேட்ச் “,என்று தெரிவித்துள்ளார்.