இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடந்து, தியோட்டர், விளையாட்டு மைதானம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கில் மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதில், தியோட்டர், கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றி மூன்று நாள்களுக்கு முன் தியோட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து பேசினார்.
அப்போது, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அரங்கினுள் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இந்த படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. படப்பிடிப்பின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய கட்டாயம் வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.