உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு…!

உலகிலேயே முதல் பாதிப்பாக இந்தியாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு டெல்லியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சற்று குறைந்துள்ளது.இருப்பினும்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அடுத்த பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோயானது பரவத் தொடங்கியுள்ளது.இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது கண்,மூக்கு மற்றும் மூளை உள்ளிட்ட பகுதிகளை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்,இந்த கருப்பு பூஞ்சை தொற்றினால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில்,அடுத்தகட்ட பாதிப்பாக வெள்ளை பூஞ்சை பாதிப்பானது,டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் (எஸ்.ஜி.ஆர்.எச்) உள்ள 49 வயதான ஒரு பெண் கொரோனா நோயாளிக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து,எஸ்.ஜி.ஆர்.எச்யின் மருத்துவர்கள் கூறுகையில்,”அந்தப் பெண் கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கல் தொடர்பான பாதிப்புகள் காரணமாக மே 13 ஆம் தேதியன்று எஸ்.ஜி.ஆர்.எச். மருத்துவமனைக்கு வந்தார்.இதனையடுத்து, அடிவயிற்றினை சி.டி ஸ்கேன் செய்ததன் மூலமாக குடலில் துளைகள் இருப்பது தெரிய வந்தது. மேற்கொண்டு பரிசோதித்ததில் அவருக்கு  வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.

இந்த வெள்ளை பூஞ்சையானது கடுமையான புண் மற்றும்  குடலிறக்கத்தை ஏற்படுத்துகிறது.மேலும்,குடலில் துளைகளை ஏற்படுத்துகிறது”,என்று கூறினர்.

அவ்வாறு,குடலில் துளைகளை ஏற்படுத்தும் இந்த வகையான வெள்ளை பூஞ்சை தொற்றானது உலகிலேயே முதல் பாதிப்பாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.