பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க குழு -மத்திய அரசு உறுதி…!

பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து,பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு விவாதம் நடத்த வேண்டும் என்று கூறி,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது.

இதற்கிடையில்,பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம்,சசிகுமார்,எம்.எல். சர்மா,சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,பெகாசஸ் உளவு தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.

இந்நிலையில்,இது தொடர்பாக இரண்டு பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும்,பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால்,மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளது.