நீட் விவகாரத்தில் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் – தினகரன்

நீட் விவகாரத்தில் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.

 அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்த தீயசக்தியான தி.மு.கவும்,அதனைச் செயல்படுத்திய பழனிசாமிஅரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவது போல நாடகம் ஆடுகிறார்களே தவிர நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால்தான் இந்த சோகம் தொடர்கிறது.

இனியாவது மக்களை ஏமாற்ற நினைப்பதைவிட்டு விட்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பிகளை வைத்திருக்கும் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும்.அதே நேரத்தில், உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது; எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கே மாணவச்செல்வங்கள் செல்லக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.