மான் வேட்டையாடிய சல்”மான்”கானுக்கு ஜாமீன் !

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம் .

மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஜோத்பூர் சிறையில் நடிகர் சல்மான் கான் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளி அன்று விசாரணைக்கு வந்தது.

சனிக்கிழமையும் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய தேவ் குமார் காத்ரி முன்னதாக சந்தித்து பேசினார். பின்னர் நீதிமன்றம் கூடியதும் சல்மான் கானின் சகோதரி அல்விரா மற்றும் பாதுகாவலர் ஷேரா மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். 15 வது வழக்காக இருந்த சல்மான் கானின் ஜாமின் மனு முதலாவதாக விசாரிக்கப்பட்டது.

சல்மான் கான் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று சாட்சியங்களின் வாக்குமூலங்களை முன் வைத்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சல்மான் கான் வழக்கறிஞர், சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லை என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார். 3 மணி அளவில் நீதிமன்றம் வந்த நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி, சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தலா 25 ரூபாய் மதிப்பில் இரண்டு பிணை பத்திரங்களை சல்மான் கான் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் சல்மான் கான் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றும், மே 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 2 இரவுகளை சிறையில் கழித்த சல்மான் கான் இன்றே சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment