வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால்,பெண்ணுக்கு பெற்றோர் செய்த சடங்கு..!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால்,நர்மதா நதியில் குளிக்க செய்து, ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கின் போது அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பெதுலில் உள்ள ஒரு இளம் பெண்,வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினரால் ‘தூய்மைப்படுத்துதல்’ சடங்கு செய்ய வற்புறுத்தப்பட்டார். அச்சடங்கின் போது,அவரது தலைமுடி வெட்டப்பட்டு,பின்னர் நதியில் குளிக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது,ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதால் பாதிக்ககப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் புகார் அளித்து போலீஸ் பாதுகாப்பு கோரிய பின்னர் இது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக பெதுல் காவல்துறை கண்காணிப்பாளர் சிமலா பிரசாத் கூறியுள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின்பேரில், அவரது பெற்றோர் உட்பட பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.எனினும்,இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, 24 வயதான பெண், தனது புகாரில், தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். டிசம்பரில் அவர் தலித் நபருடன் தங்கத் தொடங்கிய பிறகு அவரது திருமணம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்தது.

அப்பெண் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்திருந்தும், அவரது தந்தை ஜனவரி 10, 2021 அன்று தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.அதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து,ஆகஸ்ட் மாதம்,அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை தூய்மைப்படுத்துவதற்காக(purified)நர்மதா நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பெண் கூறுகையில்,”இந்த சடங்கு பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் பின்னர் என் குடும்பத்தினர்  நான் ஒரு தலித் ஒருவரைத் திருமணம் செய்ததற்காகதான் என் முடி வெட்டப்பட்டு,ஆற்றில் குளிக்க வைத்து தூய்மைப்படுத்தப்பட்டதாக கூறினார்கள்.இப்போது, என் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.இதனால்,கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, நான் ஹாஸ்டலில் இருந்து புகார் கொடுக்க வந்தேன்”,என்று அந்த பெண் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து,அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.இதனால், காவல் துறையினரிடம் பாதுகாப்பு கோரினர்.

இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.