அரசாங்கத்தின் மிருகத்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது – ராகுல் காந்தி

சீக்கிய மதகுரு பாபா ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில்,மோடி அரசாங்கத்தின் மிருகத்தனம் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 22-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு  தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே  65 வயதான சீக்கிய மதகுரு பாபா ராம் சிங், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாபா ராம் சிங் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  டெல்லி எல்லையில்  போராடும்  விவசாயிகளின் அவல நிலையைப் பார்த்து கர்னாலைச் சேர்ந்த மதகுரு பாபா ராம் சிங்  தற்கொலை செய்து கொண்டார்.இந்த நேரத்தில் எனது இரங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பல விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கத்தின் மிருகத்தனம் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது. பிடிவாதத்தை விட்டுவிட்டு உடனடியாக விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.