இறுதி சடங்கிற்காக மறைந்த எம்.பி.வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது.!

சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல்.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் எம்.பி வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதனையடுத்து, நேற்று மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர்,  வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்கு இன்று காலை வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் அலுவலகத்தில் வசந்தகுமாரின் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அங்கு அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறிது நேரம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மறைந்த வசந்தகுமாரின் உடல் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இருந்து, சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு சற்றுமுன் புறப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்