பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர்.. நெகிழ்ந்த மக்கள்!

கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக, தான் பிச்சை எடுத்த ரூ.10000 பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் வழங்கிய செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை வந்தார். இவர் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு தன்னால் ஈன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழச்சந்தை மற்றும் பூ மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக பிச்சை எடுத்து வந்தார்.

அப்பொழுது அவரிடம் ரூ.10,000 சேர்ந்தது. அதனை அவர் கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் இன்று கொடுத்தார். அதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பூல்பாண்டி கூறுகையில், அவர் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலிகள், மேஜைகள், தண்ணீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருட்களை வழங்கி கொடுத்துள்ளதாக கூறினார். இதேபோல, மேலும் 10 மாவட்டத்திற்கு சென்று பிச்சையெடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.10,000 ஐ வழங்க திட்டமிட்டுள்ளேன் என கூறினார். இவரின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.