தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது. அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை பேட்டி.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர்.
அப்போது , அங்கு தமிழர்கள் அதிகம் இருந்த காரணத்தால், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இதுகுறித்து கூறுகையில், கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு எனவும் , தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது எனவும் கூறினார்.
மேலும், பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம். அது அவர்கள் விருப்பம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் என்றும் பாஜக கூட்டணி குறித்து தம்பிதுரை எம்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.