அமைதியை நிலைநாட்ட சுமார் 200 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு.!

தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2001 முதல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5,000 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எங்களிடம் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து இதுவரை 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள தலைமை சிறைச் சாலையிலிருந்து 200 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு தலிபான்களும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையிலேயே தலிபான்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்